என் 29 வருட வாழ்க்கையில் எந்தப் படமும் படத்தை எடுத்தவரின் முகத்தில் குத்த வேண்டும் என்ற அளவிற்கு கோபத்தை ஏற்படுத்தியதில்லை. படத்தின் கதை இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். ‘இல்லாததையா எடுத்து விட்டான், தமிழ்ப்படம் என்பதால்தானே பாய்கிறீர்கள்’ என சிலர் இணையத்தில் முணுமுணுப்பது தெரிகிறது. படத்தின் கதை ஏடாகூடம் என்பதா வெறுப்பிற்கு காரணம்? இல்லவே இல்லை. நாம் கலாச்சார போலீசில் சேர்த்தி இல்லை. நாள்தோறும் அயல்நாட்டு சினிமா பார்க்கும் நமக்கு இவ்வகைக் கதைகள் புதிதும் இல்லை. சொல்லப்போனால் கிளுகிளுப்பு/காமக்கதைகள் நமக்குப் பிடித்தமான வகைகளில் (Genre) ஒன்று. Disturbing வகை கதைகளும் நிறைய பார்த்தாகிவிட்டது. கதைசொல்லும் உத்தி என ஒன்று இருக்கிறது அல்லவா? அது இயக்குனருக்கு கைவரவே இல்லை. படு குப்பையான திரைக்கதை, அறவே சுவாரஸ்யம் அற்ற காட்சிகள், எரிச்சலூட்டும் நடிப்பு இவை எல்லாம் ஒரு சேர ‘shocking value’ கதையுடன் சேர்ந்தால் என்ன ஆகும்? என் weekend சோடைபோனதுதான் மிச்சம்.

தவிரவும், படத்தில் 75% ஆங்கிலத்தில் பேசித் தொலைக்கிறார்கள். இதை தமிழ்ப்படம் என கூறுவது சரியா? சினிமா என்பது ஒரு Visual Medium என்பதும் அதில் குறைந்தபட்ச சுவராசியமாவது இருக்கவேண்டும் என்பதும் இயக்குனருக்கு தெரியாமல் போனது ஏன்? கெளதம் காப்பி அடிப்பதில் கைதேர்ந்தவர் என்பது நாம் அறிந்ததே! அதை ஒழுங்காக அடித்துத் தொலைத்தால் என்ன? Deconstruction என ஒரு விஷயம் உண்டு (குரு சுஜாதா மூலமாக தெரிந்து கொண்டது). அதாவது ஒரு எழுத்தை அல்லது படைப்பை வைத்து படைப்பாளியின் மனநிலையை கட்டுடைத்தல். யாரேனும் இப்படைத்தை Deconstruction முறையில் ஆராய்ங்களேன்!
இந்த வருடத்தில் நான் பார்க்கும் முதல் தமிழ்ப்படம் இப்படியா இருந்து தொலைக்க வேண்டும்? சமீபகாலத்தில் திரையில் நான் பார்த்த அனைத்து தமிழ்ப்படங்களும், நவீன தமிழ்ப்படங்களைப் பார்ப்பது உலகின் மோசமான பொழுதுபோக்குகளில் ஒன்று என்கிற என் கருத்திற்கு வலுசேர்க்கின்றன. தமிழ்ப்படமாவது… அடுத்த கட்டமாவது… போய் தொலையுங்கள்..